பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
    யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 

    தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
    ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  


    எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
    குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 

    எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
    என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*


    பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
    அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 

    செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
    எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)


    மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
    பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 

    பிச்சைக் குறையாகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
    இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*       


    பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
    எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 

    நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
    இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே*  


    கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
    காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 

    எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
    நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.


    உண்ணாது உறங்காது*  ஒலிகடலை ஊடறுத்துப்* 
    பெண் ஆக்கை யாப்புண்டு*  தாம் உற்ற பேது எல்லாம்* 

    திண்ணார் மதில் சூழ்*  திருவரங்கச் செல்வனார்* 
    எண்ணாதே தம்முடைய*  நன்மைகளே எண்ணுவரே* 


    பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
    பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 

    தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
    பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)      


    கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
    திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 

    அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
    பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   


    செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
    மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 

    தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
    தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2)