பிரபந்த தனியன்கள்
நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து
பாசுரங்கள்
விரைந்துஅடைமின் மேல் ஒருநாள்* வெள்ளம் பரக்க*
கரந்துஉலகம்* காத்து அளித்த கண்ணன் பரந்துஉலகம்*
பாடின ஆடின கேட்டு* படுநரகம்
வீடின வாசற் கதவு.
கதவு மனம் என்றும்* காணலாம் என்றும்*
குதையும் வினைஆவி தீர்ந்தேன்* விதைஆக
நல்தமிழை வித்தி* என் உள்ளத்தை நீவிளைத்தாய்*
கற்றமொழி ஆகிக் கலந்து.
கலந்தான் என் உள்ளத்து* காமவேள் தாதை*
நலம்தானும்* ஈதுஒப்பது உண்டே* அலர்ந்தலர்கள்
இட்டுஏத்தும்* ஈசனும் நான்முகனும்* என்றிவர்கள்
விட்டுஏத்த* மாட்டாத வேந்து.
வேந்தர்ஆய் விண்ணவர்ஆய்* விண்ஆகி தண்ணளிஆய்*
மாந்தர்ஆய் மாதுஆய்* மற்று எல்லாம்ஆய்* சார்ந்தவர்க்குத்
தன்ஆற்றான் நேமியான்* மால்வண்ணன் தான் கொடுக்கும்*
பின்னால்தான் செய்யும் பிதிர்.
பிதிரும் மனம் இலேன்* பிஞ்ஞகன் தன்னோடு,*
எதிர்வன்; அவன் எனக்கு நேரான்* அதிரும்
கழற்கால மன்னனையே* கண்ணனையே* நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்.
தொழில் எனக்குத்* தொல்லை மால்தன் நாமம் ஏத்த*
பொழுது எனக்கு மற்றுஅதுவே போதும்* கழிசினத்த
வல்லாளன்* வானரக்கோன் வாலி மதன் அழித்த*
வில்லாளன் நெஞ்சத்து உளன்.
உளன்கண்டாய் நல்நெஞ்சே* உத்தமன் என்றும்
உளன்கண்டாய்* உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்*
தன் ஒப்பான் தான்ஆய்* உளன்காண் தமியேற்கும்*
என் ஒப்பார்க்கு ஈசன் இமை.
இமயப் பெருமலை போல்* இந்திரனார்க்கு இட்ட*
சமய விருந்துஉண்டுஆர் காப்பார்* சமயங்கள்
கண்டான் அவை காப்பான்* கார்க்கண்டன் நான்முகனோடு*
உண்டான் உலகோடுஉயிர்.
உயிர்கொண்டு உடல் ஒழிய* ஓதும் போதுஓடி*
அயர்வுஎன்ற தீர்ப்பான்* பேர் பாடி* செயல்தீரச்
சிந்தித்து* வாழ்வாரே வாழ்வார்* சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
பழுதுஆகாது ஒன்று அறிந்தேன்* பாற்கடலான் பாதம்*
வழுவா வகை நினைந்து* வைகல் தொழுவாரைக்*
கண்டு இறைஞ்சி வாழ்வார்* கலந்த வினைகெடுத்து*
விண்திறந்து வீற்றி இருப்பார் மிக்கு.
வீற்றிருந்து* விண்ஆள வேண்டுவார்* வேங்கடத்தான்
பால்திருந்த* வைத்தாரே பல்மலர்கள்* மேல்திருந்தி
வாழ்வார்* வரும்மதி பார்த்து அன்பினராய்* மற்றுஅவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்*
தமர்ஆவார் யாவர்க்கும்* தாமரை மேலாற்கும்*
அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்* அமரர்கள்
தாள் தாமரை* மலர்கள் இட்டு இறைஞ்சி* மால்வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று*.
என்றும் மறந்து அறியேன்* என் நெஞ்சத்தே வைத்து*
நின்றும் இருந்தும் நெடுமாலை* என்றும்
திருஇருந்த மார்பன்* சிரீதரனுக்கு ஆளாய்*
கருஇருந்த நாள்முதலாக் காப்பு.
காப்பு மறந்தறியேன்* கண்ணனே என்று இருப்பன்*
ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்* ஆக்கை
கொடுத்து அளித்த* கோனே குணப்பரனே* உன்னை
விடத்துணியார்* மெய்தெளிந்தார் தாம்.
மெய்தெளிந்தார் என் செய்யார்* வேறுஆனார் நீறுஆக*
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து* பைதெளிந்த
பாம்பின் அணையாய்* அருளாய் அடியேற்கு*
வேம்பும் கறிஆகும்என்று.
ஏன்றேன் அடிமை* இழிந்தேன் பிறப்பு இடும்பை*
ஆன்றேன் அமரர்க்கு அமராமை* ஆன்றேன்
கடன்நாடும் மண்நாடும்* கைவிட்டு* மேலை
இடம்நாடு காண இனி. (2)
இனி அறிந்தேன்* ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்*
இனி அறிந்தேன்* எம்பெருமான் உன்னை* இனி அறிந்தேன்*
காரணன்நீ கற்றவைநீ* கற்பவைநீ* நல்கிரிசை
நாரணன்நீ* நன்கு அறிந்தேன் நான். (2)