பிரபந்த தனியன்கள்
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.
குருகூரன் மாறன் பேர் கூறு.
பாசுரங்கள்
பிரிந்துஒன்று நோக்காது* தம்முடைய பின்னே,*
திரிந்துஉழலும் சிந்தனையார் தம்மை,* -புரிந்துஒருகால்-
'ஆவா!' என இரங்கார்* அந்தோ! வலிதேகொல்,*
மாவாய் பிளந்தார் மனம்?
மனம்ஆளும் ஓர்ஐவர்* வன்குறும்பர் தம்மைச்,*
சினம்மாள்வித்து ஓர்இடத்தே சேர்த்து,* -புனம்மேய-
தண்துழாயான் அடியைத்* தாம்காணும் அஃதுஅன்றே,*
வண்துழாம் சீரார்க்கு மாண்பு?
மாண்பாவித்து அஞ்ஞான்று* மண்இரந்தான்,* மாயவள்நஞ்சு-
ஊண்பாவித்து உண்டான்* அது ஓர்உருவம்,* -காண்பான்நம்-
கண்அவா* மற்றுஒன்று காண்உறா,* சீர்பரவாது-
உண்ணவாய் தான்உறுமோ ஒன்று?
ஒன்றுஉண்டு செங்கண்மால்!* யான்உரைப்பது,* உன்அடியார்க்கு-
என்செய்வன் என்றே இருத்திநீ,* -நின்புகழில்-
வைகும்* தம் சிந்தையிலும் மற்றுஇனிதோ,* நீஅவர்க்கு-
வைகுந்தம் என்றுஅருளும் வான்?
வானோ மறிகடலோ* மாருதமோ தீயகமோ,*
கானோ ஒருங்கிற்று கண்டிலமால்,* ஆன்ஈன்ற-
கன்றுஉயர தாம்எறிந்து* காய்உதிர்த்தார் தாள்பணிந்தோம்,*
வன்துயரை ஆஆ! மருங்கு.
மருங்குஓதம் மோதும்* மணி நாகணையார்,*
மருங்கே வரஅரியரேலும்,* -ஒருங்கே-
எமக்குஅவரைக் காணலாம்* எப்பொழுதும் உள்ளால்,*
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
வரவுஆறு ஒன்றுஇல்லையால்* வாழ்வுஇனிதால்,* எல்லே!
ஒருஆறு ஒருவன் புகாவாறு,* -உருமாறும்-
ஆயவர்தாம் சேயவர்தாம்* அன்றுஉலகம் தாயவர்தாம்,*
மாயவர்தாம் காட்டும் வழி.
வழித்தங்கு வல்வினையை* மாற்றானோ? நெஞ்சே,*
தழீஇக்கொண்டு போர்அவுணன் தன்னை,* -சுழித்துஎங்கும்-
தாழ்வுஇடங்கள் பற்றி* புலால்வெள்ளம் தான்உகள,*
வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்?
மாலே! படிச்சோதி மாற்றேல்,* இனிஉனத
பாலேபோல்* சீரில் பழுத்தொழிந்தேன்,* -மேலால்-
பிறப்புஇன்மை பெற்று* அடிக்கீழ்க் குற்றேவல் அன்று,*
மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு?
மாடே வரப்பெறுவராம் என்றே,* வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்,* -ஊடேபோய்ப்-
பேர்ஓதம் சிந்து* திரைக் கண்வளரும்,* பேராளன்-
பேர்ஓத சிந்திக்க பேர்ந்து.
பேர்ந்துஒன்று நோக்காது* பின்நிற்பாய் நில்லாப்பாய்*
ஈர்ந்துழாய் மாயனையே என்நெஞ்சே,* -பேர்ந்துஎங்கும்-
தொல்லைமா வெம்நரகில்* சேராமல் காப்பதற்கு*
இல்லைகாண் மற்றோர் இறை.
இறைமுறையான் சேவடிமேல்* மண்அளந்த அந்நாள்,*
மறைமுறையால் வான்நாடர் கூடி,* -முறைமுறையின்-
தாதுஇலகு* பூத்தெளித்தால் ஒவ்வாதே,* தாழ்விசும்பின்-
மீதுஇலகித் தான்கிடக்கும் மீன்.
மீன்என்னும் கம்பில்* வெறிஎன்னும் வெள்ளிவேய்*
வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத்,* -தான்ஓர்-
மணிக்காம்பு போல்* நிமிர்ந்து மண்அளந்தான்,* நங்கள்-
பிணிக்குஆம் பெருமருந்து பின்.
பின்துரக்கும் காற்றுஇழந்த* சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,*
வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே,* -அன்று-
திருச்செய்ய நேமியான்* தீஅரக்கி மூக்கும்,*
பருச்செவியும் ஈர்ந்த பரன்.
பரன்ஆம் அவன்ஆதல்* பாவிப்பர் ஆகில்,*
உரனால் ஒருமூன்று போதும்,* -மரம்ஏழ்அன்று-
எய்தானை* புள்ளின்வாய் கீண்டானையே,* அமரர்-
கைதான் தொழாவே கலந்து?
கலந்து நலியும்* கடுந்துயரை நெஞ்சே,*
மலங்க அடித்து மடிப்பான்,* -விலங்கல்போல்-
தொல்மாலை கேசவனை* நாரணனை மாதவனை,*
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு.
சூட்டாய நேமியான்* தொல்அரக்கன் இன்உயிரை,*
மாட்டே துயர்இழைத்த மாயவனை,* -ஈட்ட-
வெறிகொண்ட* தண்துழாய் வேதியனை,* நெஞ்சே!-
அறிகண்டாய் சொன்னேன் அது.
அதுவோ நன்றுஎன்று* அங்கு அமர்உலகோ வேண்டில்,*
அதுவோ பொருள்இல்லை அன்றே?,* -அதுஒழிந்து-
மண் நின்று* ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே,*
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.
கல்லும் கனைகடலும்* வைகுந்த வான்நாடும்,*
புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,* -வெல்ல-
நெடியான் நிறம்கரியான்* உள்புகுந்து நீங்கான்,*
அடியேனது உள்ளத்து அகம்.
அகம்சிவந்த கண்ணினர்ஆய்* வல்வினையர் ஆவார்,*
முகம்சிதைவராம் அன்றே முக்கி,* -மிகும்திருமால்-
சீர்க்கடலை உள்பொதிந்த* சிந்தனையேன் தன்னை,*
ஆர்க்குஅடல்ஆம் செவ்வே அடர்த்து?
அடர்பொன் முடியானை* ஆயிரம் பேரானை
சுடர்கொள் சுடர்ஆழி யானை,* -இடர்கடியும்-
மாதா பிதாவாக* வைத்தேன் எனதுஉள்ளே*
யாதுஆகில் யாதே இனி?
இனிநின்று நின்பெருமை* யான்உரைப்பது என்னே,*
தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,* -பனிநீர்-
அகத்துஉலவு* செஞ்சடையான் ஆகத்தான்,* நான்கு-
முகத்தான் நின்உந்தி முதல்.
முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,* ஒன்றே-
முதல்ஆகும்* மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-
நிகர்இலகு கார்உருவா!* நின்அகத்தது அன்றே,*
புகர்இலகு தாமரையின் பூ?
பூவையும் காயாவும்* நீலமும் பூக்கின்ற,*
காவி மலர்என்றும் காண்தோறும்,* -பாவியேன்-
மெல்ஆவி* மெய்மிகவே பூரிக்கும்,* அவ்வவை-
எல்லாம் பிரான்உருவே என்று.
என்றும் ஒருநாள்* ஒழியாமை யான்இரந்தால்,*
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-
குடைஆக* ஆகாத்த கோவலனார்,* நெஞ்சே!-
புடைதான் பெரிதே புவி.
புவியும் இருவிசும்பும் நின்அகத்த,* நீஎன்-
செவியின் வழிபுகுந்து* என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-
யான்பெரியன் நீபெரியை* என்பதனை யார்அறிவார்,*
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
உள்ளிலும் உள்ளம் தடிக்கும்* வினைப்படலம்,*
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,* -உள்ள-
உலகுஅளவும் யானும்* உளன்ஆவன் என்கொல்*
உலகுஅளந்த மூர்த்தி! உரை.
உரைக்கில்ஓர் சுற்றத்தார்* உற்றார் என்றுஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,* -உரைப்புஎல்லாம்-
நின்அன்றி* மற்றுஇலேன் கண்டாய்,* எனதுஉயிர்க்குஓர்-
சொல்நன்றி ஆகும் துணை.
துணைநாள் பெருங்கிளையும்* தொல்குலமும்,* சுற்றத்து-
இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,* கணைநாணில்-
ஓவாத் தொழில்சார்ங்கன்* தொல்சீரை நல்நெஞ்சே,*
ஓவாத ஊணாக உண்.
உள்நாட்டுத் தேசுஅன்றே!* ஊழ்வினையை அஞ்சுமே,*
விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-
ஆர்ஆகி* எவ்இழிவிற்று ஆனாலும்,* ஆழிஅங்கைப்-
பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?
பிறப்பு இறப்பு மூப்புப்* பிணிதுறந்து,* பின்னும்-
இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-
ஏதமே* என்றுஅல்லால் எண்ணுவனே,* மண்அளந்தான்-
பாதமே ஏத்தாப் பகல்?
பகல்இரா என்பதுவும்* பாவியாது,* எம்மை-
இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-
தொழும்பர் இவர் சீர்க்கும்* துணைஇலர் என்றுஓரார்,*
செழும்பரவை மேயார் தெரிந்து.
தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்* தீவினையேன்,* வாளா-
இருந்தொழிந்தேன்* கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-
அம்மானை* அந்நான்று பின்தொடர்ந்த* ஆழிஅங்கை-
அம்மானை ஏத்தாது அயர்த்து.
அயர்ப்பாய் அயராப்பாய்* நெஞ்சமே! சொன்னேன்*
உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-
அல்லவே செய்கிறுதி* நெஞ்சமே! அஞ்சினேன்*
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
வாழ்த்தி அவன்அடியைப்* பூப்புனைந்து,* நின்தலையைத்-
தாழ்த்து* இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*
எங்குஉற்றாய் என்றுஅவனை* ஏத்தாதுஎன் நெஞ்சமே,*
தங்கத்தான்ஆ மேலும் தங்கு.
தங்கா முயற்றியஆய்* தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,*
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-
தண்அம்பால்* வேலைவாய்க் கண்வளரும்,* என்னுடைய-
கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?
கார்கலந்த மேனியான்* கைகலந்த ஆழியான்,*
பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-
சொல்நினைந்து போக்காரேல்* சூழ்வினையின் ஆழ்துயரை,*
என்நினைந்து போக்குவர் இப்போது? (2)
இப்போதும் இன்னும்* இனிச்சிறிது நின்றாலும்*
எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-
கைகழலா நேமியான்* நம்மேல் வினைகடிவான்*
மொய்கழலே ஏத்த முயல் (2)