பிரபந்த தனியன்கள்

கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

   பாசுரங்கள்


    வரத்தால் வலிநினைந்து*  மாதவ! நின் பாதம்,*
    சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-

    ஈர்அரியாய்*  நேர்வலியோன்ஆய இரணியனை,* 
    ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?  


    ஊனக் குரம்பையின்*  உள்புக்கு இருள்நீக்கி,* 
    ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-

    உருவாய் உலகுஇடந்த*  ஊழியான் பாதம்,*
    மருவாதார்க்கு உண்டாமோ வான்?      


    வான்ஆகி தீஆய்*  மறிகடல்ஆய் மாருதம்ஆய்* 
    தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-

    வெண்ணெய் விழுங்க*  நிறையுமே,*  முன்ஒருநாள்-
    மண்ணை உமிழ்ந்த வயிறு?  


    வயிறுஅழல வாள்உருவி*  வந்தானை அஞ்ச* 
    எயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-

    பூவடிவை ஈடுஅழித்த*  பொன்ஆழிக் கையா நின்-
    சேவடிமேல் ஈடுஅழிய செற்று?  


    செற்றுஎழுந்து தீவிழித்து*  சென்ற இந்த ஏழுலகும்,* 
    மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,*  முற்றும்-

    மறையவற்குக் காட்டிய*  மாயவனை அல்லால்,* 
    இறையேனும் ஏத்தாதுஎன் நா.


    நாவாயில் உண்டே*  'நமோ நாரணா' என்று,*
    ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-

    மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
    தீக்கதிக்கண் செல்லும் திறம்? 


    திறம்பாது என்நெஞ்சமே!*  செங்கண்மால் கண்டாய்,*
    அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,*  புறம்தான்இம்-

    மண்தான்*  மறிகடல்தான் மாருதம்தான்,*  வான்தானே,-
    கண்டாய்*  கடைக்கண் பிடி.  


    பிடிசேர் களிறுஅளித்த பேராளா,*  உன்தன்-
    அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-

    அனற்குஅங்கை ஏற்றான்*  அவிர்சடைமேல் பாய்ந்த,*
    புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்? 


    பொன்திகழும் மேனிப்*  புரிசடைஅம் புண்ணியனும்,* 
    நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-

    இருவர்அங்கத்தால் திரிவரேலும்,*  ஒருவன்-
    ஒருவன் அங்கத்து என்றும் உளன்.  


    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
    உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*

    வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)


    ஓர்அடியும் சாடுஉதைத்த*  ஒண்மலர்ச் சேவடியும்,* 
    ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-

    தாயவனை கேசவனை*  தண்துழாய் மாலைசேர்,*
    மாயவனையே மனத்து வை (2)