பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்* பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,*
எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்* எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்*
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்* மடமானை இதுசெய்தார் தம்மை,* மெய்யே-
கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?'
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்*
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்*
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்*
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே!
கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்*
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்*
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா- மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய- அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை*
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக! என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய- களிறு என்றும்* கடல் கிடந்த கனியே! என்றும்*
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி* அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்*
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி* தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு*
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப* பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்*
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?
முற்று ஆரா வன முலையாள் பாவை* மாயன்- மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்-
அற்றாள்* தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்*
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள* தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி*
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள* பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க-
பார் ஆளன்* பார் இடந்து பாரை உண்டு- பார் உமிழ்ந்து பார் அளந்து* பாரை ஆண்ட-
பேர் ஆளன்* பேர் ஓதும் பெண்ணை மண்மேல்* பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?
மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ* மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட*
எய் வண்ண வெம் சிலையே துணையா* இங்கே- இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்*
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே*
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!* அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! (2)
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்-
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன*
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது*
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே?
இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்-
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்*
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி*
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு*
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்* தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்*
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த* அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை*
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்* அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று*
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது* நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே
செங் கால மட நாராய் இன்றே சென்று* திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு*
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்* இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை* நாளும்-
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்* பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* தந்தால்-
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்* இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (2)
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்* சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்*
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த* வரை உருவின் மா களிற்றை தோழீ* என்-தன்-
பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு* போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி*
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த* எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -
வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்-
நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!* விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று*
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த* அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை*
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்* மான வேல் பரகாலன் கலியன் சொன்ன*
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார்* தொல்லைப்- பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (2)